"வெவ்வேறு காலஇட அலகுகளை ஊடிணைத்து ஒரு வலை பின்ன முயலும்போது, பித்தம் தலைக்கேறிக் கிறுகிறுக்கிற மாதிரியான பரவசம் சித்திக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகத் தோற்றமளிக்கும் கதைகளை நுட்பமாகக் கோர்த்துச் செல்லும் சரடு சில சமயம் வெளிப்படையானது. பல சமயம் பூடகமாக இருப்பது. வாசகருக்கு இணையாக நானும் அந்தச் சரடைத் தேடிப் பிடிக்க முயல்கிறேன். கவிதை எழுதத் தொடங்கிய நாட்களில், ஒன்றுக்கு மேற்பட்ட படிமங்களைக் கோக்க முற்படும்போது, முற்றிலும் புதியதொரு வாசிப்பனுபவம் உருவாவதை உணர்ந்திருக்கிறேன், அதே விதமாக, புனைகதையிலும் நிகழ்த்திப் பார்ப்பதே என் ஆவல்."