あらすじ
மிகெய்ல் நைமி எத்தகைய ஞானச் சிகரம் என்பது தெரிந்ததுதானே! இந்த எதிர்பார்ப்போடு உள்ளே புகுந்தால், மீண்டும் திகைப்புத்தான்! திகைப்பிற்கு மேல் திகைப்பு! இந்த முறை - பச்சையாகச் சொன்னால் - ஒரு சாராயக் கடையிலிருந்து ஊற்றெடுத்துப் பொங்கிப் பிரவகிக்கிறது ஞானவெள்ளம்! ஞானப் புயல்! ஞானத்தின் பிறப்பிடம், நாம் எதிர்பார்ப்பதுபோல, ஒரு மகானின் ஆசிரமமாகத்தான் இருக்க வேண்டுமா? ஒரு மதுபானக் கடையாக இருக்காதா என்ன? “ஒரு பிராமணர் காட்டில் கடுந்தவம் புரிந்து வந்தார். தவமுடிவில், அவர் எழுந்துபோக முயலும்போது, அவர் தோளின் மீது ஒரு பறவையின் எச்சம் விழுந்தது. அவர் அருவருப்பும் சினமும் கொண்டு மேலே பார்த்தார். அவரது பார்வையில் பட்ட கொக்கு சட்டென எரிந்து சாம்பலாயிற்று! தனது தவ வலிமையின் கர்வத்துடன் அவர் சென்று ஒரு வீட்டின் முன் நின்றார். உணவுக்காகத்தான். குறிப்புணர்ந்த அந்த வீட்டுப் பெண்மணி வெளியே வர என்ன காரணத்தாலோ தாமதமாகிவிட்டது. அதைச் சகித்துக் கொள்ளாத அவர் அவளைச் சினந்து பார்த்தார். எரித்துவிடத்தான்! ஆனால், அந்த அம்மையார் எரிந்துவிடவில்லை. அது மட்டு மல்ல, அவரைப் பார்த்து, “கொக்கென்று நினைத்தீரோ?” என்று கேட்டார்! துறவி அதிர்ந்துபோனார்! காட்டிலே நடந்தது, வீட்டிலே இருக்கும் இவளுக்கு எப்படித் தெரிந்தது என்றும், தனது சினத் தீஇங்கே செல்லுபடியாக வில்லை என்றும் கண்ட அவரிடம், அந்தப் பெண்மணி, ஒரு பெயரும் அடையாளமும் சொல்லி ‘அவரிடம் போ, ஞானம் பெறுவாய்!” என்று அனுப்பிவைத்தார். அவர் போனார். அம்மையார் குறிப்பிட்ட இடம் ஒரு கசாப்புக்கடை அவர் ஞானம் பெற வேண்டிய குருநாதர் கசாப்புக் கடைக்காரர். இவர், அவரிடம் மெய்ஞ்ஞானம் பெற்றார் என்பது கதை! ஆனால், ஆழமான கருத்துள்ள கதை இது. மெய்யுணர்வு பெற்றவர் என்ன உருவில், என்னவாக, எப்படி இருப்பார் என்று சொல்லமுடியுமா என்ன?